மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Sunday, October 24, 2010

நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!

வாக்களியுங்கள் நம்மால் முடியாததை இவர் செய்கிறார்
துரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.
சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.
கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...
****
நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்! 

நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.
"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.
அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன். 
இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.
"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.

இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.
சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!
***
ரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.
அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.
கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."
- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய...http://heroes.cnn.com/vote.aspx
நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/
இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

நன்றி: நியூஸ் விகடன் (23/10/2010)

Sunday, October 17, 2010

காவிக்கு பணிந்த நீதி!


ரோமிலா தாப்பர்


காவிக்கு பணிந்த நீதி!

இயர்லி இந்தியா புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர் சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது எனக் கூறி தீர்ப்பிற்கு தனது கடும் எதிர்ப்பை ஆதாரத்துடன் விவரித்துள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது, இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக்கு கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமை கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது எனக் கூறி தீர்ப்பின் கோமாளித்தனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னணி ஆங்கில நாளேடான தி ஹிந்து இதை விரிவாக விளக்கியுள்ளது


கட்டுரையாளர்: பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.

நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன். சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.

ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.

ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.

இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.

நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும்.

தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?

வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.

இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

நன்றி:தி ஹிந்து, தேஜஸ், பாலைவனத் தூது.